Showing posts with label நீதித்துறை. Show all posts
Showing posts with label நீதித்துறை. Show all posts

Friday, March 27, 2015

நீதிபதி சந்துரு யார் பக்கம் என்பது தெளிவாகிவிட்டது!

நீதிபதிகள் நியமனம் குறித்து வழக்குரைஞர்களின் தொடர் போராட்டங்களை கொச்சைப்படுத்தும்விதமாக ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு பிப். 18 தேதியன்று ”யாருடன் போராடுகிறார்கள் வழக்கறிஞர்கள்?”, மார்ச் 16-ந் தேதியன்று “போராடும் வழக்கறிஞர்களின் சிந்தனைக்கு” என  தி இந்துவில் இரண்டு கட்டுரைகள் எழுதியுள்ளார்.  இதற்கு வழக்குரைஞர்களின் தரப்பிலிருந்தும், அரசியல் கட்சித் தலைவர்களும் எதிர்வினைகள் செய்துள்ளார்கள்.

நீதிபதிகள் நியமன விவகாரத்தில் தமிழகத்தில் வழக்குரைஞர்களின்  போராட்டங்களுக்கு பிறகு தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதி மன்றம் பொங்கி “நீதிபதிகளுக்காக பரிந்துரைக்கப்படுகிறவர்களின் சட்ட அறிவைத் தவிர, அறிவாற்றல், குணம், நேர்மை, பொறுமை, உணர்ச்சி” என நீண்ட பட்டியலிட்டு எல்லாவற்றையும் சீர்தூக்கிப் பார்க்கவேண்டும் என தீர்ப்பளித்தது.

நடைமுறையில் நீதிபதிகளின் நியமன விசயத்தில் கொலீஜிய முறையில் இருப்பது என்ன?  பொதுவாக போலீசுதான் சட்டத்தை மதிக்காமல் காலில் போட்டு மிதிக்கும். அதேபோல,  நீதித்துறையும் அப்படித்தான் நடந்துகொள்கிறது.  சட்டம் தெரியாதவன், வழக்குரைஞர் தொழிலை ஒப்புக்கு செய்தவன், நீதிபதிக்கு கூஜா தூக்குபவன், உனக்கு வேண்டியவன் ஒருத்தன், எனக்கு வேண்டியவன் ஒருத்தன் என ரகசிய பேரம் நடத்தி தான் பட்டியல் தயாரித்து தான் அனுப்புகிறார்கள்.  இதையெல்லாம் பேசினால், நாறிப்போய்விடும் என்றுதான் சந்துரு கவனமாக பேச மறுக்கிறார்.

மார்ச் 25 அன்று நீதிபதிகளின் யோக்கியதையை அம்பலப்படுத்தி “அறம் பிறழ்கிறார்களா உச்ச நீதிபதிகள்” என ராமசந்திர குஹா விரிவாக ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில்

”உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவராக பெஞ்சில் இருந்த பொழுது சதாசிவம் ஒரு கொலை வழக்கில் அமித்ஷாவை விடுதலை செய்தார். ஓய்வு பெற்ற பிறகு இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக ஓய்வு பெற்ற உ.நீ. மன்ற நீதிபதி சதாசிவம் கேரள ஆளுநராக பதவியில் இருக்கிறார். குறைந்த பொறுப்பு, நிறைய சம்பளம் கிடைக்கும் பதவி கிடைக்குமா என (நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு) பா.ஜ.கவின் தேசிய தலைவராக இருக்கும் அமித்ஷாவின் மகன் திருமண விழாவில் கலந்துகொள்கிறார்.


”நீதிபதிகளில் இரண்டு வகையினர் உண்டு. ஒரு பிரிவினர் சட்டங்களை நன்றாக தெரிந்து வைத்திருப்பவர்கள்.  இன்னொரு பிரிவினர் சட்ட அமைச்சரை நன்கு தெரிந்து வைத்திருப்பவர்கள்” என நீதிபதிகளை அருண் ஜெட்லி (2012ல்) கிண்டலடித்திருக்கிறார்.



நீதித்துறையில் ஊழல் எந்த அளவிற்கு புரையோடி போயிருக்கிறது என்பதற்கு சாட்சியாக 50 ஆண்டுகளாக நேர்மையாக வழக்குரைஞராக இருக்கும் சாந்திபூஷண் 2010ல் உச்சநீதி மன்றத்தின் கடந்த 16 தலைமை நீதிபதிகளில் 8பேர் ஊழல் செய்தவர்கள் என அறிக்கையாக தாக்கல் செய்தார். அதை அரசு இன்றுவரை வெளியிடவே இல்லை”.


- இப்படி உச்ச நீதிமன்ற  தலைமை நீதிபதியிலிருந்து, உயர்நீதி மன்ற நீதிபதிவரை பல ஊழல்புகார்கள், பாலியல் புகார்கள் என ஏகப்பட்ட அழுக்குகள் இருக்கின்றன. அதைப் பற்றி எழுதினால் வண்டி வண்டியாக எழுதிக்கொண்டே இருக்கமுடியும். ”போராடுகிற வழக்குரைஞர்களுக்கு” என எழுதும் சந்துரு, “நீதிபதிகளின் கவனத்திற்கு” என ஏன் எழுத மறுக்கிறார்?

நீதிபதிகள் நியமனத்தில் வழக்குரைஞர்கள் கருத்து சொல்வது தான் சந்துருவுக்கு கோபம் கோபமாக வருகிறது.   அதனால் தான் பொதுமக்களுக்கு நீதித்துறையில் உள்ள விசயங்கள் தெரியாது என்பதை தெரிந்து வைத்துக்கொண்டு கீழமை நீதிமன்றங்களில் சமூகநீதி பூத்துக்குலுங்குவதாய் ரமணா ஸ்டைலில் புள்ளிவிவரங்களை கொண்டு வாயடைக்கிறார்.  அவர் வாதம் எப்படியிருக்கிறது என்றால், துப்புரவு தொழிலில் தலித் மக்கள் பெரும்பான்மை இருப்பதை காட்டுவது போல இருக்கிறது!

அதே போல பிப். 19ல் வழக்குரைஞர்கள் மற்றும் நீதிபதிகள் மீதான காவல்துறையின் வெறித்தனமான தாக்குதலை  ‘வழக்கறிஞர்-காவல்துறை மோதல்’ என இரண்டையும் சமன்படுத்தி எழுதி, குற்றத்திலிருந்து காவல்துறையை விடுவிக்கிறார். பாதிக்கப்பட்ட வழக்குரைஞர்களையும் குற்றவாளியாக்குகிறார். இதில் வழக்குரைஞர்கள் மீதான அவருடைய காழ்ப்புணர்ச்சி பச்சையாக வெளிப்படுகிறது.

எதற்கெடுத்தாலும் வழக்காடிகள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை ஊறுகாய் போல சந்துரு பயன்படுத்துகிறார்.  எத்தனை நீதிபதிகள்  வாய்தா, வாய்தா கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் வழக்கை பல ஆண்டுகாலம் நீட்டித்து இருக்கிறார்கள். அப்படியே வழக்கை விசாரித்தாலும் நீதி வழங்குவதை தள்ளிப்போடுகிறார்கள். ஒரு வழக்கை பட்டியலில் கொண்டுவர ஒரு வழக்குரைஞர் எவ்வளவு போராட வேண்டியிருக்கிறது! அதையெல்லாம் தெரிந்தும் பேச மறுக்கிறார்.

நம் பக்கம் நின்று கொண்டு பேசுவது போல, அரசின் உறுப்புகளில் ஒன்றான அழுகிகொண்டிருக்கும் நீதித்துறையை பாதுகாக்கும் வேலையை தான் சந்துரு அப்பட்டமாக செய்கிறார். இதன்மூலம் ஆளும் வர்க்கத்திற்கும், அரசுக்குமான ஆளாக செயல்படுகிறார். அதனால் தான் போராடும் வழக்குரைஞர்களை தொடர்ந்து கொச்சைப்படுத்துகிறார்.

அவர் யார்பக்கம் என்பதை புரிந்துகொள்வதற்கு தான்  நமக்கு இவ்வளவு காலமாகியிருக்கிறது!