Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Sunday, March 1, 2015

உனக்கும் எனக்கும்!

அவசர அவசியமாய் தின்று
ஓடியாடி உழைத்து
உடல் களைத்துப் போகையில்
இரவு உனக்காய் படுக்கை விரித்துவிடும்.
பதினைந்து நாட்களிலேயே பற்றாக்குறை
கடன்களை பெற்றெடுக்கும்.

பொய்கள் சொல்லி பொருட்கள் விற்று
ஆசை ஆசையாய் வாங்கி ஏமாந்து
சக மனிதன் மீது நம்பிக்கை இழக்கையில்
உள்ளம் கனத்துப் போகும்.

காதலாய் பழகியவர்களிடம் நட்பை வலுப்படுத்தி
நட்பாய் பழகியவர்களிடம் காதலை வெளிப்படுத்தி
இறுதியில்
முகமறியா நபருடன் வாழ்க்கை பயணிக்கும்.

ஓடுகிற ஓட்டத்தில்
ஆபூர்வமாய் திரும்பி பார்க்கையில்
வெறுமை நிலவி கண்கள் பனிக்கும்.

உனக்கும் எனக்கும் வித்தியாசமில்லை.

நீ ஏழு வயதில்
கண்ணாடி அணிந்திருப்பாய்.
நான் இருபத்தேழு வயதில்.

உன் அப்பா ஆலையிலிருந்து
ஏழு நாட்களுக்கு முன்
வெளியேற்றப்பட்டிருப்பார்.
என் அப்பாஏழு ஆண்டுகளுக்குமுன்.

உனக்கும் எனக்கும் வித்தியாசம்
உருவத்தில் மட்டுமே!
உள்ளடக்கத்தில் ஒன்றாய்.

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
உன் கனவில் கவிபாரதி வந்திருப்பான்.
வேறு வார்த்தைகள் கொண்டு
என் கனவில் பாரதிதாசன்.
ஆளுக்கொரு சாதி சொல்லி
தனித்தனியாய் கனவுகள் கண்டு
இத்தனை காலம்
சிங்கங்களுக்கும் நரிகளுக்கும்
இரையாகிப்போனோம்.

கரங்களை ஒண்றிணைப்போம்.
கனவுகளுக்கு ஆக்கம் கொடுப்போம்.
பணிவதைவிட நிமிர்வது உயர்வானது

நீ வருவாய் என!

சத்தங்களை வடிகட்டி
நுட்பமாய்
உன் கொலுசு இசையை
பதிவு செய்திருக்கின்றன
என் காதுகள்.

சலனங்களைத் தவிர்த்து
கவனமாய்
உன் ஒவ்வொரு அசைவையும்
படம் பிடித்திருக்கின்றன
என் கண்கள்.

உன் மெளனத்தைக்கூட
மொழி பெயர்க்க
கற்றிருக்கிறது
என் மனசு.

நீயில்லாத நாள்களால்
வெற்றுத்தாள்களாய்
நகருகிறது
என் நாட்குறிப்பு.

கனவுகளில் மட்டும்
தாலாட்டிப் போகிறாய்.

முளரி மொட்டு
என் கவிதைகள்
பால் நிலா
நாட்குறிப்பு - எல்லாம்
என்னோடு
உன் வருகைக்காக
காத்திருக்கின்றன.

எப்பொழுது வருகிறாய்
இங்கு
நிஜத்தில் நீ

பொம்மைகளும் விளையாட்டு பொருட்களும்!

நூறு பொருட்கள் கேட்டால்
அவள் அழுது அழுது - அல்லது
நாங்கள் அழுது அழுது
ஒன்றைத்தான் வாங்கித்தர முடிகிறது!

பொம்மைகளின் வழியே
யார்? யார்? பரிசாய் தந்தது என
அடையாளம் சொல்லிவிடுகிறாள்!

பொம்மைகளை கொண்டு
புதியவர்களை - எளிதாய்
நண்பர்களாக்கிவிடுகிறாள்!

எத்தனைமுறை கண்டித்தாலும்
கண்டுகொள்ளாமல் - வீடு முழுவதும்
பொம்மைகளை பரப்பிவிடுகிறாள்!

உடைந்த வளையல் துண்டு,
நாலு சக்கரம் இழந்த கார் - என எல்லாமும்
விளையாட்டு பொருட்களாகிவிடுகின்றன!

பொம்மைகளோடு விளையாட வைத்து
சமயங்களில் எங்களையும்
குழந்தைகளாக்கிவிடுகிறாள்!

பொம்மைகள் வாங்கிவராத விருந்தினர்கள்
விளையாட்டு பொருட்கள் இல்லாத குழந்தைப்பருவம்
நினைவுகள் - அவ்வப்பொழுது
வந்துபோவதை தவிர்க்கவே முடியவில்லை!